இந்த ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நோபல் பரிசு என எல்லோராலும் அறியப்படும் இந்த விருதுக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதில் இரண்டு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபர் ரமோன் மகசேசே. மக்கள் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய இவரின் நினைவைக்கூரும் வகையில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது `ஆசிய நோபல் பரிசு’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான மகசேசே விருதை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் பரத் வத்வானி மற்றும் பொறியாளர் சோனம் வாங்சக் ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த மருத்துவரான பரத் வத்வானி, சாலை ஓரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதேபோல் சிறப்பான கல்விச் சேவையை வட மாநிலங்களில் விரிவுபடுத்தியதற்காக சோனம் வாங்சக்குக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவரின் கல்விச் சேவையால், அரசாங்கப் பணிகளில் அதிகமானோர் தேர்வாகி உயரிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர். இவர்களைப் போல் இந்த விருதுக்கு, கம்போடியா, கிழக்கு தைமூர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த, மக்கள் சேவையில் சிறப்பாய் பணியாற்றிய 4 பேர் தேர்வாகியுள்ளனர்.