இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் ஏஎச்-64இ அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் அதிநவீனமானவை. தாக்குதலில் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவை. இந்நிலையில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸில் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், உடனடியாக இந்தியாவுக்கு 6 ஹெலிகாப்டர்கள் விற்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தி உள்ளது. இவற்றின் விலை 930 மில்லியன் அமெரிக்க டாலர். (மொத்தம் 6,231 கோடி ரூபாய்.) இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்பதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறை மேலும் வலுப்பெறும். தனது நாட்டை பாதுகாத்துக் கொள்வதிலும் பிராந்திய அள வில் உருவாகும் அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியும்’’ என்று தெரிவித்துள்ளது.
அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தனது ராணுவத்தில் பயன்படுத்தி வருகிறது. அத்துடன் சர்வதேச பாதுகாப்புப் படைகளிலும் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதுதவிர வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்குவது மற்றும் தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ‘ஹெல்பையர்’ ரக ஏவுகணை மற்றும் தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக் கும் ‘ஸ்டின்ஜெர்’ ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இரவிலும் எதிரில் உள்ளவற்றை கண்டறிய உதவக் கூடிய சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், மற்றும் ரேடார்களை இந்தியாவுக்கு வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.