படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வார்த்தையை பேருந்துகளில் மட்டுமல்ல இனி ரயில்களிலும் எழுதி வைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்து பள்ளி மாணவர் உட்பட நான்கு பேர் பலியாகினர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இறந்ததுக்குக் கூட்ட நெரிசலே காரணம் என்று பல்வேறு தரப்பினரால் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலின் போது படியில் நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்ற கருத்தை பல பயணிகள் முன்வைக்கின்றனர்.
எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளனர். குறுகிய பாதையாக இருந்ததால் பலர் ரயில் இருந்து கீழே விழுந்தும், அருகில் இருந்த தடுப்பு சுவரின் மீதும் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்குக் காரணம் பயணிகள் படியில் பயணம் செய்ததே என்று பல தரப்பட்டவர்களிடம் இருந்து பல்வேறு கருத்துகள் வருகின்றன. படிகளில் பயணம் செய்வது தவறுதான். ஆனால் ரயிலில் இடம் இல்லாதபோதும், கூட்டம் அதிகமாக இருக்கும்போதும் படியில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்று. இது போன்று பயணம் செய்தே ஆக வேண்டுமா என்றால், தேவையில்லைதான். ஆனால் பள்ளிக்கு செல்வது காலதாமதம் ஏற்படும், குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாது என்பதே பலருக்கு கடினமாக ஒன்று.
ரயில்வே துறை 700-க்கும் அதிகமான மின்சார ரயில்களை இயக்குகிறது. இதில் ஒவ்வொரு நாளும் சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக, காலை மற்றும் மாலை வேலையில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். இந்த நேரத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, அதற்குத் தகுந்தாற்போல், ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
இதுவரை சென்னையில் மட்டும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை ஆறு மாதங்களில் மட்டும் 39 பேர் இறந்துள்ளனர். 2017 ஆண்டு 69 பேர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளனர். சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர்கள் மட்டுமே 191 பேர். இது போன்று தமிழகத்தில் வருடத்துக்கு 1500 பேருக்கு மேல் உயிரிழப்பதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.
குறிப்பாக இந்தியாவிலேயே அதிகளவில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பவர்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் வட மாநிலங்களில் கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் ரயிலின் மீதுள்ள மேற்கூரைகளிலும் பயணம் செய்வார்கள். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக 33.4% வழக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 2015-ம் ஆண்டு மட்டும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர்கள் 1,742 பேர் இதில் காயமடைந்தவர்கள் வெறும் 31 பேர் மட்டுமே. ஆனால் 1,734 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாயன்று விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த ஏடிஜிபி சைலேந்திரபாபு, ரயில் பயணிகள் உயிரிழப்புக்குக் கவனக்குறைவே காரணம் என்று தெரிவித்தார். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்போது குறுகிய பாதையுள்ள தடத்தில் ரயிலை இயக்கியிருக்கக் கூடாது. கூட்ட நெரிசலைச் சரிசெய்திருக்க வேண்டும். அல்லது மாற்றுப்பாதையில் ரயிலை இயக்கியிருக்க வேண்டும். தற்போது பலர் தப்பித்துக் கொள்வதற்காக, இறந்துப்போன அப்பாவி மக்கள் மீதே பலி சுமத்துப்படுகிறது.