புதுடெல்லி: ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருந்தால் பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் டெல்லியில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பஸ்வான், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும் என்றார்.
உரிய பயனாளிகளுக்குத்தான் அவை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும் என்றும் பாஸ்வான் குறிப்பிட்டார்.
மேலும், பட்டினிச் சாவு ஏற்படாமல் மக்களுக்கு உணவுதானியங்களை கிடைக்கச் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார். ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பஸ்வான் மேலும் தெரிவித்தார்.