புதுடில்லி:”ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது, தற்போதைக்கு சாத்தியமில்லை,” என, அரசு கொள்கைகளை உருவாக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவர், ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:பெட்ரோல், டீசல் ஆகியவற்றை, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வந்தால், அவற்றின் விலை குறையும் என, கூறப்படுகிறது. ஆனால், ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.ஜி.எஸ்.டி.,யில் அதிகபட்ச வரி, 28 சதவீதமாக உள்ளது.
அதேசமயம், பெட்ரோல், டீசலுக்கு, மத்திய, மாநில அரசுகளின் வரி, 90 சதவீதமாக உள்ளது.இந்த நிலையில், எந்த மாநிலமும், பெட்ரோல், டீசலில் கிடைக்கும் வரி வருவாயை, ஜி.எஸ்.டி.,அளவிற்கு குறைத்துக் கொள்ள முன்வராது.
ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசலை சேர்க்க, உச்சபட்ச வரி விகிதத்தை ஓரளவு உயர்த்தலாம். அதற்கு, ஜி.எஸ்.டி., வரி கட்டமைப்பில், புதிய பிரிவை உருவாக்க வேண்டும். இது, மிக நீண்ட நெடிய நடைமுறையாகும்.
எனினும், சில காலத்திற்கு பின், பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி.,யில், கொண்டு வர வழி உள்ளது.அதற்கு முதற்கட்டமாக, மாநிலங்கள் தற்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு விதிக்கும்வரியை குறைக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை உயரும் போது, கூடுதல் வரிகள் மூலம், மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.ஆகவே, கூடுதல் வரி விதிப்பை ஒரே சீராக இருக்குமாறு செய்ய வேண்டும்.