மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

மகாராஷ்ரா : மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்கள் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. ததர் டிடி, கபுத்தர்கானா, கிங் வட்டம், சாந்தாகுரூஸ், மரோல் மாரோசி மலபார் ஹில், தாராவி, பைகுல்லா, ஆந்தேரி சுரங்கப்பாதை, நாகபடா, ஹிண்ட்மாடா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளம் போல் காட்சியளிக்கறது. இதனால் தாராவி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சையான் ரயில் நிலையத்தில் மழைநீரில் தண்டவாளம் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருக்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணா சங்க்ஹி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் மழை காரணமாக மும்மை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் சுமார் 30 நிமிடங்கள் வரை மூடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றனர். கடுமையான மழை காரணமாக தானே மற்றும் பைக்குல்லா நிலையங்களுக்கு இடையே 15-20 நிமிடங்கள் ரயில் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குஜராத்தில் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும், ஒடிசா, புவனேஷ்வரிலும் கனமழை பெய்துவருகிறது.

1 comment

Leave a comment

Your email address will not be published.