சென்னை: மதுரவாயலில் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியை சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் (40). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ேவலை பார்த்தார். அப்போது, அங்கு கார்கோ கம்பெனியில் வேலை பார்த்தார். அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இலங்கையை சேர்ந்த அனிஷா பாத்திமா (35) என்பவரை காதலித்துள்ளார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய பிறகு உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் காதல் திருமணம் நடந்தது.
இந்நிலையில் பிழைப்புக்காக மனைவி அனிஷா, மகன்கள் முகமது நயீப் (6), ரயான் (3) ஆகியோருடன் சென்னைக்கு வந்தார். மதுரவாயல் ஷேக்மானியம் பகுதி காமதேனு நகர் 2வது தெருவில் கடந்த ஒரு வருடமாக வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். ஹபீப் ரகுமான், கேட்டரிங் தொழில் செய்தார். ஆர்டரின் பேரில் சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு சப்ளை ெசய்து வந்தார். குறிப்பாக பிரியாணி ஆர்டர் நிறைய குவியுமாம்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அனிஷா தன் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, தாய்நாடான இலங்கைக்கு ெசன்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்ற துக்கம் மற்றும் கேட்டரிங் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்னர் அந்த தொழிலையும் ஹபீப் ரகுமான் விட்டார். அதன்பிறகு ஆறு மாதமாக கிடைத்த வேலைகளை செய்து 2 குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். அதில் மூத்த மகன் முகமது நயீப்பை இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்க ஆர்வமாக இருந்தார். இதற்காக, சில பள்ளிகளில் விண்ணப்பமும் வாங்கி வந்துள்ளார். எப்போதும் காலையில் குழந்தைகளுடன் வீட்டின் முன்பு ஹபீப் உட்கார்ந்து இருப்பார். அதேபோல மாலையிலும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார். ஆனால், கடந்த சில நாட்களாக ஹபீப் ரகுமானின் வீடு பூட்டியே கிடந்தது. எனவே, சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று இருப்பார் என்று அக்கம் பக்கத்தினர் அமைதியாக இருந்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை, ஹபீப் ரகுமானின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பூட்டிக்கிடந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஹபீப் ரகுமான், முகமது நயிப், ரயான் ஆகியோர் இறந்து கிடந்தனர். மூவரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஹபீப் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் நீல நிறத்தில் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியபோது விஷ பாட்டில் சிக்கியது.
தான் தற்கொலை செய்த பிறகு, தனது மகன்கள் அனாதையாக உலகில் இருக்கக் கூடாது என்பதால், அவர்களுக்கு முதலில் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் ஹபீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் ெதரிவித்தனர். 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து, கடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளுடன் ஹபீப் ரகுமான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மனைவி பிரிந்ததால் மனம் உடைந்தாரா, இல்லை வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் ஹபீப்பின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் யார் யாருடன் கடைசியாக பேசியுள்ளார் எனவும் ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனநிலை பாதிப்பு
போலீசார் விசாரணையில், சென்னையில் கேட்டரிங் வேலை செய்து வந்த ஹபீப் மற்றும் அவரது மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்படுமாம். அப்போது அவர் குழந்தைகளை அடிப்பதாக கூறப்படுகிறது. இதை ஹபீப் கண்டித்துள்ளார். மேலும் துபாயில் இருந்தபோதே அனிஷா பாத்திமா மனநிலை பாதிப்பில் இருந்துள்ளார். இதனால் அனிஷா அடிக்கடி கோபித்துக்கொண்டு இலங்கையில் உள்ள தன் அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிடுவாராம். பின்னர் ஜமாத்தை சேர்ந்த உறவினர்கள் இருவரிடமும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி சேர்த்து வைத்துள்ளனர். எனினும்
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிஷா இலங்கை சென்றுள்ளார். எப்போதாவது வந்து தனது குழந்தைகளை பார்த்து விட்டு செல்வார். கடந்த வாரம் சென்னைக்கு வந்த அவர், உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு குழந்தைகளை பார்க்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சகோதரரிடம் குழந்தைகளை ஒப்படைத்திருக்கலாம்
ஹபீப் ரகுமானின் இரு குழந்தைகளும் பார்க்க கொழு கொழுவென்று இருப்பார்களாம். மனைவி, இலங்கையில் வசிப்பதால் ஹபீப் ரகுமானே, அவர்களை பாசமுடன் வளர்த்து வந்துள்ளார். அப்பகுதியில் வசிப்பவர்கள், இரு குழந்தைகளையும் தூக்கி கொஞ்சி மகிழ்ந்துள்ளனர். 2 குழந்தைகளுடன் ஹபீப் ரகுமான் தற்கொலை செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஹபீப் ரகுமானின் அண்ணனுக்கு குழந்தை இல்லை. அதனால், அவர்களிடமாவது இந்த குழந்தைகளை ஒப்படைத்திருக்கலாமே என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.