மனிதவளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மனிதவளத்துறையின் சார்பிலே புதிதாக துவங்கப்பட்டிருக்கக் கூடிய இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- இன்று (03-07-2018) தமிழக சட்டப்பேரவையில் மத்திய பா.ஜ.க அரசின் மனிதவளத்துறையின் சார்பிலே புதிதாக துவங்கப்பட்டிருக்கக்கூடிய இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தேன்.

மத்திய பா.ஜ.க அரசினுடைய மனிதவளத்துறையின் சார்பிலே புதிதாக துவங்கப்பட்டிருக்கக்கூடிய இணையவழி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழ் மட்டுமல்ல, மலையாளம், தெழுங்கு, கன்னடம் ஆகிய தென்னக மொழிகள் அனைத்துமே முழுமையாக புறக்கணிக்கப்பட்டு தெற்கு, வடக்கு என்ற பிளவு மனப்பான்மை ஏற்படுத்தியுள்ளது. வேண்டுமென்றே, திட்டமிட்டு பரப்பக்கூடிய இத்தகையை வெறுப்பும், விரோதமும் மிக மிக கண்டனத்திற்கு உரியதாக அமைந்திருக்கிறது.

நம் இந்திய நாடு குறித்தும், இந்த நாட்டினுடைய கலாச்சாரம் குறித்தும், அனைத்து நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்த இணையவழி நூலகம் உதவும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 3 லட்சம் எழுத்தாளர்களின் ஒரு கோடி நூல்கள் இதில் இடம் பெற்றிருந்த போதிலும் தமிழகத்தைச் சார்ந்த வரலாற்று நூல்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் நூல்கள் இதிலே இடம் பெறவில்லை என்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.