மரம் வளர்த்தால் தங்க மோதிரம்..! பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் போட்டி

மரம் வளர்த்தால் தங்க மோதிரம் பரிசு என்று மாணவர்களின் மனதில் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற நல்ல விதைகளை விதைத்து வருகின்றது, ‘கனவுகிராமம்’ என்ற அமைப்பு. அதற்கான விழா இன்று நடைபெற்றது .

மதுரை மேலூரை அடுத்த திருவாதவூர் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குமரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கனவு கிராமம் என்ற அமைப்பினர் மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினர். இதுதொடர்பாக, கனவு கிராமம் அமைப்பைச் சார்ந்த நண்பர்கள் கூறுகையில், ”லயன்ஸ் கிளப் உதவியோடு மாணவர்களிடம் மரம் வளர்க்கும் எண்ணத்தைக் கொண்டு சென்றுள்ளோம் . 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 மரக்கன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். ஒரு ஆண்டுக்குள் சிறப்பாக வளர்க்கும் 10 மாணவர்களைத் தேர்வுசெய்து குலுக்கல் முறையில் ஒரு மாணவனுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான தங்கத்தை தலைமை ஆசிரியரிடம் முன்கூட்டியே வழங்கியுள்ளோம். திருவாதவூர் பள்ளிக்கூடம் மட்டுமல்லாமல், திருவாதவூர் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கம்பட்டி, உலகுபிச்சான்பட்டி, சமத்துவபுரம், டி.கோவில்பட்டி, வெள்ளமுத்தான்பட்டி ஆகிய  ஆறு ஊர்களில் இருக்கும் தொடக்கப் பள்ளியிலும், தலா 1 கிராம் தங்கம் வீதம் 6 கிராம் தங்கத்தையும், 500 மரக் கன்றுகளையும் கனவு கிராமம் அமைப்பின் சார்பாக வழங்கியுள்ளோம். இதனால், மாணவர்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published.