கடந்த சிலநாள்களாக சென்னையில் மாலை நேரங்களில் மழை வெளுத்துவாங்கி வருகிறது. சமீபமாக சென்னையில் மந்தமான வானிலை நிலவி வந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கம் முதல் குளுமையான காற்றும், அதையொட்டி மிதமான மழையும் பெய்யத் துவங்கியது. கடந்த நான்கு தினங்களின் மாலை வேளையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கத் துவங்கியதால் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெப்பச் சலனத்தால் சென்னையில் மிதமான மழை தொடரும்.
இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், பலத்த தரைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கும்படியும், மணிக்கு 60 கி.மீ வரை தரைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை பகுதி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.