ராணுவ மேஜரின் மனைவியை கொன்றபின் குற்றவாளியான நிகில் டேட்டிங் பக்கத்தில் மற்றொரு பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் இராணுவ மேஜர் அமித் திவிவேதி. இவரின் மனைவியான சைலஜா கடந்த சனிக்கிழமை டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மற்றொரு இராணுவ மேஜரான நிகில் ஹண்டாவை கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் பதுங்கி இருந்த போது ஹண்டா பிடிபட்டார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சைலஜாவின் கணவர் அமித் திவிவேதி நாகலாந்தில் பணி புரிந்து வந்துள்ளார். அங்குதான் நிகில் ஹண்டாவுக்கு, சைலஜாவுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அமித்துக்கு டெல்லிக்கு பணியிட மாறுதலாகியுள்ளது. ஆனாலும் நிகில்-சைலஜா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது டெல்லி வந்த நிகில் சைலஜாவின் திருமணம் செய்து கொள்ளும்படி கூறவே, அவர் மறுப்பு தெரிவிக்கவே இது கொலையில் போய் முடிந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது சில பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சைலஜாவை கொலை செய்த இராணுவ மேஜர் நிகில் ஹண்டா கடந்த ஜனவரி மாதம் முதல் கொலை நடந்த நாள்வரை 3,500 முறை சைலஜாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
நிகிலுக்கு பல்வேறு போலியான பெயரில் முகநூல் கணக்குகள் இருந்துள்ளன. அவர் பெண்களை ஈர்க்கும் வகையில் போலியான புரொபைல்களுடன் டேட்டிங் பக்கங்களிலும் தொடர்பில் இருந்துள்ளார்.
ராணுவ மேஜர் மனைவி சைலஜா கொலைக்கு பின் நிகில் இந்த பக்கங்களில் பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
டெல்லியின் பட்டேல் நகரில் வசித்து வரும் அந்த பெண் தனது மோசம் நிறைந்த திருமண வாழ்வில் இருந்து வெளிவருவதற்காக நிகிலுடன் நெருங்கி பழகியுள்ளார்.
இவருக்கு நிகில் மற்றும் சைலஜா இருவரையும் தெரியும் என்றும் ஆனால் சைலஜாவை இவர் சந்தித்த்தில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். நிகில் கொலை செய்துள்ளார் என்று என்னால் நம்ப முடியவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிகிலை விசாரணை செய்து வரும் மூத்த போலீஸ் அதிகாரி குமார் கூறும்பொழுது, ஒவ்வொரு நாளும் தவறான தகவலை நிகில் எங்களுக்கு அளித்து வருகிறார். நாங்கள் 90 சதவீத பணியை முடித்து விட்டோம். இன்னும் சில நாட்களில் உண்மை தெரிய வரும் என கூறியுள்ளார்.