லோக்பாலை அமைக்கக் கோரி வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
லோக்போல் மசோதாவை நிறைவேற்றக் கோரி கடந்த 2011 ஏப்ரலில் அண்ணா ஹசாரே டெல்லியில் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில் அண்ணா ஹசாரே கூறியிருப்பதாவது:
ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் அமைப்பு இன்னமும் உருவாக்கப்படவில்லை. அதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களைக் கூறுகிறது. ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. லோக்பால் அமைப்பை நியமிக்கக் கோரி மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் எனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளேன். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.