மதுரை: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து திறக்கப்படுகிறது. முன்னதாக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டிருந்தார். வைகை நீர் திறப்பால் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 50 அடியை எட்டியது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல்போகத்துக்கும், அக்டோபர் மாதத்தில் இரண்டாம் போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுதால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி வைகை அணையில் இருந்து ஜூலை 4–ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கிடையே மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முடிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்னரே இன்று (வியாழக்கிழமை) முதல் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அதன்படி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு, நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீரினை இருப்பை பொறுத்து இன்று முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் பேரணை முதல் கள்ளந்திரி வரையுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று குறிப்பிடத்தக்கது.