சந்திர கிரகணம் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 11:54 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 03:49 மணி வரை நீண்ட நேரம் நிகழவிருக்கிறது. இது இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் எனப்படுகிறது. உத்திராட நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த கிரகணம் நள்ளிரவு 1.50 மணியளவில் உச்சத்தை அடைகிறது. இன்று காலை எழுந்ததும் சந்திர கிரகண நிகழ்வை ஒட்டி உண்டாகும் தோஷங்களை நீக்க அனைவரும் இறைவனை பூஜிப்பது அவசியமாகிறது. முக்கியமாக கிரகணம் நிறைவுற்றதும், குளித்து முடித்து கோயிலுக்குச் செல்ல வேண்டும். முக்கியமாக ஈசனுக்கு வில்வ இலைகள் கொடுத்து, செவ்வரளி மாலைகள் சாத்தி பிரார்த்திப்பது நன்மை அளிக்கும். நவகிரகங்களை வணங்கி சந்திரனுக்கான ஸ்லோகங்களை சொல்லி வழிபடலாம். விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபடுவதும் தோஷ நிவர்த்திக்கு நன்மை அளிக்கும். பெயர், நட்சத்திரம் சொல்லி வழிபடுவது அல்லது அர்ச்சிப்பது சிறப்பானது. கிரகண வழிபாட்டில் கோளறுப்பதிகம், விஷ்ணு சகஸ்ரநாமம், பிள்ளையார் ஸ்தோத்திரங்கள், லலிதா சகஸ்ரநாமம் போன்றவைகளை பாராயணம் செய்வது தோஷங்களை நிவர்த்திக்க உதவும். கிரகணம் முடிந்து வழிபாடு செய்தபிறகே ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பரிகார ஸ்லோகங்கள் சொல்லி வழிபடலாம்.
“வஜ்ராயுதம் தாங்கிய இந்திரனும், சூரிய சந்திர தேவர்களும் கிரகண தோஷத்திலிருந்து காக்கவேண்டும். எருமையை வாகனமாகக் கொண்ட நீதிதேவன் யமதர்மராஜன் உள்ளிட்ட எண்திசை காவலர்களும் கிரகண தோஷத்திலிருந்து காக்கவேண்டும். விடையேறும் பெருமான், வில்லும், சூலமும் தாங்கிய பரமேஸ்வரன் கிரகண தோஷத்திலிருந்து காக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டு தங்கள் பணிகளைத் தொடங்கலாம்.