ஜூலை 31-ம் தேதிக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய தாமதித்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்- வருமானவரித் துறை அறிவிப்பு

வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வோர் வரும் 31-ம் தேதிக்குள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்யாவிட்டால் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வருமானவரித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வருமானவரிச் சட்டம் 44ஏபி-யின் கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2017-18 நிதியாண்டு) வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வரும் ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாகும். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் பெறுவோர் மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234 எப் பிரிவின்படி, கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் விவரம் வருமாறு:

வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான வரும் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வரும் 31-ம் தேதிக்குப் பிறகு, அதேசமயம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வரும் 31-ம் தேதிக்குப் பிறகு ஆனால் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்த வேண்டும். டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.

வருமானவரிச் சட்டத்தின் புதிய நடைமுறையின்படி 139-வது பிரிவின் கீழ், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பிறகு எவ்வித வருமானவரி கணக்கும் தாக்கல் செய்ய இயலாது. உதாரணமாக மதிப்பீட்டு ஆண்டு 2018-19க்கு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

மேலும், அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் அல்லது தோராய வருமானம் உள்ளோர் ஐடிஆர்-1 (சஹஜ்) அல்லது ஐடிஆர்-4 (சுகம்) படிவங்களில் வருமானவரி கணக்கை கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு காகித வடிவில் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

இதன்படி, முந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மொத்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் தங்களது வருமானவரி கணக்கில் திரும்ப கிடைக்க வேண்டிய தொகை கோராதவர்கள் மேற்கண்ட முறையில் காகித வடிவில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலை, எண்.121-ல் செயல்படும் ஆயக்கர் பவன் வளாகத்தில் சிறப்புக் கவுன்ட்டர்கள் அனைத்து வேலை நாட்களிலும் இன்று (16-ம் தேதி) முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை செயல்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.