அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் அன் இடையே நடைபெற்ற சந்திப்பு உலகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
பியாங்யாங்,

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர்.
வடகொரியா- அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொண்டதை உலகமே உற்று நோக்கியது. இரு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சுமார் 3 ஆயிரம் பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் திரண்டு இருந்தனர். பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள், இணையதள செய்தி நிறுவனங்கள், அதிக முக்கியத்துவத்துடன் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை வெளியிட்டன.
இவ்வாறாக, உலகமே பரபரப்பாக கிம்- டிரம்ப் சந்திப்பை உற்று நோக்கிய நிலையில், வடகொரியா மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த செய்தியை உற்றுநோக்கியதாக சி.என்.என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் உள்ள ரயில் நிலையத்தில், பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு வடகொரிய அதிபரின் செயல்பாடுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிம் ஜாங் அன் – டிரம்ப் சந்திப்பு காட்சிகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. வடகொரிய மக்களும் ஆர்வத்துடன் இந்த காட்சிகளை பார்த்தனர். வடகொரிய பத்திரிகையாளர்களும், வரலாற்று சிறப்பு மிக்க முதல் சந்திப்பு என கருத்து தெரிவித்தனர்.