ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த நீதிமன்றம், ஜூலை 3-ம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. அதேநேரம் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டது. இதன்படி ஆஜரான சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடையை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஏ.கே.பதக் உத்தரவிட்டார். முன்னதாக, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சிதம்பரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.