திருப்பூரில் வசித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகன் மாயமானது குறித்து, அவர் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் தங்கை பத்மினி. இவரது மகள் துர்கா வைஷ்ணவி. கணவர் சிவமூர்த்தி (47). தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையத்தில், சிவமூர்த்தி பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற சிவமூர்த்தி, அதன்பின் வீடு திரும்பவில்லையாம். இதுதொடர்பாக அவரது தந்தை சின்னசாமி நேற்று அளித்த புகாரின்பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
சிவமூர்த்தியின் அலைபேசி எண்ணை வைத்து விசாரித்தபோது, கடைசியாக சத்தியமங்கலம் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை யாரேனும் கடத்திச் சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீஸார் தரப் பில் கூறப்படுகிறது.