உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்! 234 தொகுதிகளில் 788 பணிகள்! ஸ்டாலின் பச்சைக்கொடி!

கடந்த 7.05.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 22.08.2022 அன்று எழுதிய கடிதத்தில் அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டச் செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை 28.09.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து 1896 பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்தது.

பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அனைத்து துறைகளிடமிருந்தும் இது தொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி, நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், 2023-24ஆம் ஆண்டில் செயல்படுத்த எடுத்துக்கொள்ளும் பணிகள், என வகைப்படுத்தப்பட்டு அப்பணிகளுக்கு 8.9.2023 அன்று அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலான பணிகளை தேர்வு செய்யும் குழு ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப் படவுள்ளன. மேலும், 2024-25ம் ஆண்டில் 203 பணிகள் ரூ.5,901 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *